இதய நோய் வராமல் தடுப்போம் - பாதுகாக்கும் வழிகள்

இதய நோய் வராமல் தடுப்போம்  - பாதுகாக்கும் வழிகள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்

Share Market Training : Whatsapp : 9841986753
பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்
இலவச பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040
பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. மனித உயிரின் ஜீவாதாரமாக இருதயமே (இதயமே) திகழ்கிறது. ஆனாலும், இந்த அற்புத உறுப்பைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு, மற்ற நாடுகளைக் காட்டிலும், நம் நாட்டு மக்களிடையே மிகக் குறைவு. அதனால்தான், இந்தியாவில் மட்டும் ஆண்டு 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிர் இழக்கிறார்கள்.

நமது மானுட வாழ்வியலில் திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாகவும், அடிப்படையாகவும் இருப்பதே மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால் மட்டுமே நிகழ்கின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் உயிரிழப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவற்றில் 75 லட்சம் பேர் மாரடைப்பாலும், 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதய நோய் என்றதும், பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு மட்டும்தான் தெரிகிறது. அதனால், இதயம் சம்மந்தமான விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.

தினமும் பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், விளையாட்டு வீரர்களுக்கு கார்டியோமையோபதியும், வயதானவர்களுக்கு கரோனரி ஆர்ட்டரி ஃபெயிலியரும், குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை என எந்த வயதினருக்கும் இதய நோய்கள் திடீரென ஏற்பட்டு விடுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வுதான் நமக்கு இப்போதைய அவசர அவசிய தேவையாக இருக்கிறது.

இயற்கை விவசாய வீழ்ச்சி, உணவு பழக்க வழக்க மாற்றங்கள், துரித உணவில் கலந்துள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு, குளிர்பானங்கள், புகையிலைப் பழக்கங்கள், மாசுபடிந்த சுற்றுச் சூழல், உடல்பருமன் ஆகியவற்றின் மூலமே இதயம் சம்மந்தமான நோய்கள் எளிதில் அனைத்து தரப்பினரையும் தாக்கிவிடுகின்றன. முக்கியமாக, 25 வயதிலேயே இதயம் நோயின் பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. இனி இதய நோயிலிருந்து நமது உடலைப் பாதுகாக்க, நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டாலே போதும். இதயம் சுகம் பெறும்.

உடல் முழுவதும் ரத்தம் செல்ல, அதற்குண்டான வேலையைச் செய்கிறது நம் இதயம். இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்குச் செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம். பக்கவாதம் கூட ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் வருகிறது. ரத்தம் தடைப்படுவதால், இதயத் தசைகள் செயலிழக்கின்றன. இதற்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம் ஆகியவையே இந்த மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கின்றன.

இதய நோய்களைத் தடுக்க இரண்டு விதமான முறைகள் கட்டாயமாக பின்பற்றப்படுகின்றன. ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியே இருதய ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உணவே மருந்து

இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றன. புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. முடிந்த அளவு அசைவத்தைத் தவிர்ப்பதும், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது. அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சியே ஊட்டம்

தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்கள், குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நீச்சல் அல்லது சைக்ளிங் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, அது ஊட்டமாகவும் உடலில் செயல்படுகிறது. தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. நமக்குரிய ஆரோக்கியமான எடை தானாகவே சரிவரப் பொருந்திவிடுகின்றன. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

மது-புகையே பகை

மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஒருவர் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும், அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதையும் தவிர்ப்பது அவசியம்.

முதற்கட்டமாக இத்தகைய விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டாலே போதும், இதய நோய்கள் குறைந்து விடும். இனி இதய நோய் வராமல் தடுப்போம். வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுப்போம்!

இந்த இதய நாளில்.. இதயத்தைக் காப்போம் என ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்!